சனி, 27 அக்டோபர், 2012

பெயரை தொலைத்தவள்

உன்னை முதன்முதலில்
பார்த்த போது வேணு மாமாவின்
மனைவி என்று எல்லோருக்கும் அறிமுகபடுத்தப்பட்டாய்
பாலா பிறந்த பின் எல்லோரும் பாலாவின்
அம்மா என்றே அழைத்தனர்
மாமாவின் கடையை பார்த்து கொண்டதால்
கடைக்காரம்மா என்று அழைத்தனர் பலர்
நேசத்தையும் பிரியத்தையும் மட்டுமே பகிர
தெரிந்த உன்னை பிரிந்து புகுந்த வீடு
சென்ற அன்று உன்னை கட்டியணைத்து
அழுது பிரிந்தவள்
பின்னொரு நாளில் விசாலாட்சி இறந்து விட்டாள்
என்கிற செய்தி கேள்வியுற்ற போதினில் அந்த செய்தி
எளிதாய் என்னை கடந்து சென்றது
உன் பெயர் தொலைத்த காரணத்தினால் .....






வெள்ளி, 5 அக்டோபர், 2012

சொல்ல முடியவில்லை ...

நீ பார்க்கவில்லை என்பதால்
அலங்கரிப்பதை நிறுத்தினேன்....
நீ கேட்கவில்லை என்பதால்
என் கொலுசுகளை கழற்றினேன்...
நீ ரசிக்கவில்லை என்பதால்
என் புன்னகையை தொலைத்தேன்...
நீ நினைப்பதில்லை என்பதால்
உன்னை நினைப்பதில்லை என்று மட்டும்
சொல்ல முடியவில்லை என்னால்.......