வெள்ளி, 30 மார்ச், 2012

மாமாவின் மரணசெய்தி..

அதிகாலை வேளையில்
அலறி அழைத்த தொலைபேசியில் வந்தது
அன்பும் பாசமுமாய்
தோளில் தூக்கி வளர்த்த
மாமாவின் மரணசெய்தி ....
கணக்கிட்டது பல காரணங்களை
பணம் மட்டுமே பிரதானமென
மாறிவிட்ட பொருளாதார மனது...
பயணதூரம் கணக்கிடப்பட்டது முதலில்
தொலைவும் அதிகம் பணமும் விரயம்,
பிள்ளைகளின் படிப்பு பாழகுமோ ஒருநாள்?
எங்கள் வீட்டு துயரத்திற்கு
துக்கம் கேட்காமல் போனாரே!
அம்மாவும் தம்பியும் போனால் போதாதோ?
என்றெல்லாம் எண்ணமிட்டது மனது
இறுதியாய் முடிவெடுத்து
ஒரு ரூபாய் செலவழித்து
தொலைபேசியில் இரங்கல் தெரிவித்து
ஊரிலேயே இல்லை நான்
என்கிற ஒற்றை பொய்யுடன் முடிந்து போனது
மாமாவின் மரணசெய்தி.......

ஞாயிறு, 25 மார்ச், 2012

காதல் கவிதைகள்

காத்திருத்தல்

காத்திருப்பதின் வலி உனக்கு
புரிய வைக்க காத்திருக்க வைத்தேன்
இப்போதும் எனக்கு தான் வலிக்கிறது
உன்னை காத்திருக்க வைத்ததால்......

மணம்
என்றுமே மணத்ததில்லை மல்லிகை
இன்று உன் கையில் வாங்கி சூடிய போது
மணத்தது போல் .....

புகைப்படம்
உற்று பார்க்காதே என்னிடம் உள்ள
உன் புகைப்படத்தை
என் உதட்டின் ரேகைகள் மறைத்திருக்கிறது
உன் முகத்தின் அழகை ....

நினைவு விதை
வேரோடு பிடுங்குவதாய் எண்ணி
முழுவதும் களைந்து எறிந்தேன்
உன் காதலை
நியாபக தூறல்கள் விழும் போதெல்லாம்
துளிர்த்து எழுகிறது எங்கோ ஆழத்தில்
படிந்திருக்கும் உன் நினைவு விதைகள் .....

பார்வை
ஆயிரம் வார்த்தைகள் பேசும்
உன் உதடுகளை விட
உன் ஆழ பார்வை ஒன்றே
என் மீதான உன் காதலை
அதிகம் சொல்கிறது ......

செவ்வாய், 13 மார்ச், 2012

இன்றும் ......

பால் வாங்குவதிலும் பேப்பர் வாங்குவதிலும்
ஆரம்பிக்கிறது காலை பொழுது
கணவனிடம் பணிவிடை செய்ய தொடங்கி
பிள்ளைகளிடம் தாயாய் சேவை செய்து
மாமனார் மாமியாரிடம் நல்ல மருமகளாய் பணிந்து
நாள்ளெல்லாம் உழைத்து களைத்து
இரவு கண்மூடி உறங்க போகும் வேளையில்
நினைவினில் வருகிறது ....
ரசிக்காமல் போன தோட்டத்து ரோஜாவும்
கேட்காமல் போன இளையராஜாவின் புதியவெளியீடும்
விசாரிக்காமல் போன அம்மாவின் கால்வலியும்
எழுதாமல் மறந்து போன கவிதை வரிகளும்
வரிசையாய் நினைவுக்கு வருகின்றன........
நாளையேனும் எனக்கென ஒதுக்க வேண்டும்
சிலமணி நேரத்தை என்று எண்ணியபடியே
கழிகிறது இன்று இரவும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........