திங்கள், 29 நவம்பர், 2010

அணில் பிள்ளை

ராமர் போல் அவதாரமாய் இருந்திருந்தால்
இலங்கை அசுரர்களை அழித்திருப்போம் .....
அனுமன் போல் பலமிருந்திருந்தால்
இலங்கைக்கு தீ இட்டு இருப்போம் ...
ஓடி வந்து உதவிட மனமிருந்தும்
இயலாமையால் தவிக்கிறோம் ....
காலம் கனியும் பொழுதினில்
அவதாரமாய்,பலவானாய்..
உதவ இயலாவிட்டாலும்
நிச்சயம் துரும்பெடுத்து போடுவோம்
அணில் பிள்ளை போல் .................

சனி, 27 நவம்பர், 2010

வார்த்தை பூக்கள்

வார்த்தை பூக்கள் பூத்தன
ஆயிரம் என் மனதில்
கோர்த்து வைத்து தேடினேன் உன்னை
அருகினில் நீ வந்த போது
நாணம் தடுத்தது மாலையிட
வெட்கப்பட்டு உனக்கு சூடாமலே
காய்ந்து கிடக்கிறது
பல வார்த்தை மாலைகள்
என் மன தோட்டத்தில் ......

புதன், 24 நவம்பர், 2010

பம்பரம்

சில நேரங்களில் சோகத்தோடு
பல நேரங்களில் ஆனந்தத்தோடு
சில நேரங்களில் அமைதியில்
பல நேரங்களில் சிந்தனையில்
புரியாத புதிராய் நான்
என்னை புரிந்தவர்கள் அறிவார்கள்
சுற்றுகின்ற பம்பரம் நான்
சுழட்டுகின்ற சாட்டை நீ
நீ சொடுக்கி விட்ட இடத்தில
சுழல்பவள் நானென்று ........

ஆயுதம்

ஆயுதங்கள் தேவையில்லை
எனைக் கொல்ல
உன் நினைவுகளே போதும் ....

திங்கள், 22 நவம்பர், 2010

பயணங்கள்


சுட்டெரிக்கும் சூரியன்
சுகமாய் குளிர்விக்கிறது ....
முட்செடிகள் பூக்களாய்
காட்சியளிக்கிறது ......
பல மைல் தூரங்கள்
நொடியில் கடக்கின்றன ..
கரடுமுரடான பாதைகள்
பஞ்சு மெத்தை போலாகின்றன ....
சாலையில் போவதை மறந்து
ஆகாயத்தில் மிதக்கிறேன்
உன்னுடனான பயண நேரங்களில் மட்டும் ....

செவ்வாய், 16 நவம்பர், 2010

சிந்தனை


சிந்தித்ததை எழுத்தில் வடிக்கவிடாமல்
எப்போதும் உன் தொந்தரவு
தனிமையில் சிந்தித்து
கற்பனைகளை கொட்டிவிட
பேராவல் உண்டானது எனக்கு
அத்தினமும் வந்தது ஓர்நாள்
மையூற்றி அமர்ந்தேன் நானும்
சிந்தனைகள் மட்டும்
சென்று விட்டது உன் பின்னே .........

வெள்ளி, 12 நவம்பர், 2010

அரசியல்


தொண்டை வரள குரல் கொடுத்து
உடல் வருத்தி உண்ணாநோன்பிருந்து
கண்ணீர் வழிய விவசாயின் துயரம் பேசி
தண்ணீர் தராத அண்டை மாநிலத்தின்
கல் நெஞ்சும் கரைய கெஞ்சி பேசி
தண்ணீர் பெற போராடிய
அரசியல்வாதி தம்பியை
பார்த்து சிரிக்கிறான் அவன் அண்ணன்
தன் வயலுக்கு வரும் நீரை
தடுத்து மடை எழுப்பி
பயிர் வாட செய்த அவன் செயலை எண்ணி .........

சனி, 6 நவம்பர், 2010

ஈரம்


அரவமின்றி வந்திறங்கியது
அந்த உடல்
அழுது அரற்ற ஆளில்லை
கதறி அழுவோர் யாருமில்லை
ஆட்டோவில் வந்திறங்கி
ஒதுங்கியபடி நின்றனர்
ஒப்பாரி வைத்து அழுவது
நாகரீகம் இல்லையென
கண்ணீரை கைகுட்டையால்
ஒற்றி எடுத்தனர்
கடிகாரத்தை பார்த்து கொண்டே
பிணம் தூக்க காத்திருந்தனர்
ஊர் திரண்டு புலம்பி அழுது
வழியனுப்பி வைத்ததோர் காலம்
இன்று வெப்பமடைந்து காய்ந்து போனது
பூமி மட்டுமில்லை ........
ஈரம் இல்லாத மனித இதயங்களும் கூட ........