வெள்ளி, 2 டிசம்பர், 2016

என் மடிதனை
நனைக்கும் உன்
கண்ணீரின் வெம்மை சுடுகிறது.....
 ஆயினும் அசைவின்றி
காத்திருக்கிறேன்
பரசுராமரின் தூக்கம் கலைய
காத்திருந்த கர்ணனை
போல...
உன் துக்கம் கரையவே .........

திங்கள், 14 நவம்பர், 2016

தானென்ற மமதை 

சிரித்துமழுப்பும் உன் உதடுகளில்
அமர்ந்திருக்கிறது அது ....
 கையசைத்து பேசும் உன் விரல்களின் 
இடுக்கினிலிருந்து  பார்த்து சிரிக்கிறது.....
தொலைபேசியின் வழியினில் 
காதுகளில் கொக்கறிகிறது.....
யாரிடமோ பேசுவது போல் பார்க்கும் உன்
கண்களின் ஓரத்தில் பதுங்கியிருக்கிறது அது .....
உறவுகளின் மத்தியில் இருந்து 
உன் கால்களை பற்றி இழுத்து 
செல்கிறது அது......
 
என்றேனும் ஒருநாள் 
நீயாய் அதை கொல்லலாம்
இல்லை தானேனும் அது மரிக்கலாம் 
அன்பெனும் அகம் திறக்கும் அவ்வேளை 
உனை சூழ்ந்திருக்கும் ஒரு தன்னந்தனி தீவு .....

திங்கள், 18 ஜூலை, 2016

கிருஷ்ணனை போல் பொல்லாத குறும்புக்கார பிள்ளை இல்லை...முருகனை போல் கோபித்து செல்பவனும் இல்லை...கண்ணனை போல் கோபியருடன் திரிபவனுமில்லை....அம்மை அப்பனை சுற்றி வந்து வேண்டியதை பெற்று கொள்ளும் விக்னேஷ்வரன். ......என் மகன் விக்கி யின்  24 வது பிறந்தநாள் இன்று. ...அவன் வாழ்வில் என்றும் நலமுடனும் வளமுடனும் இன்புற்று வாழந்திட நல்லுள்ளங்கள் வாழ்த்துங்களேன்........

புதன், 29 ஜூன், 2016

பெண்ணானவன்

பெண் ஒரு பறவை, சிறகுகள் உண்டு
இத்தனை உயரத்தில் இத்தனை வேகத்தில்
பறந்திட ஆணையுண்டு .....

பெண் ஒரு இயந்திரம்
இவ்வளவு வேகத்தில் இவ்வளவு வேலைகளை
முடித்திட உத்தரவுண்டு ......

பெண் ஒரு கைதி
சுதந்திரமாய் உள்ளேயே சுற்றிடவும்
இட்ட வேலையை செவ்வனே முடித்திடவும்
வரைகளுண்டு .....

பெண் ஒரு வாகனம்
வேகங்களை கட்டுக்குள் வைத்து
நினைத்த நேரத்தில் ஓட்டத்தை
தடுத்திட கட்டளைகளுண்டு ......

பெண் ஒரு பட்டாம்பூச்சி
அவளை கூட்டுப்புழுவென மாற்றிட
ஒழுக்கமென்னும்  ஆயுதமெடுக்கும்  மனங்களுண்டு.....

கட்டுகள் தளர்த்தி தன் சுயம்
தேடும் பெண்ணை
அன்பை காட்டி ஆளமுடியா ஆண்மகனவன் ....

பெண்ணுடலை வெளிச்சமிட்டு காட்டி
 சிறகொடித்து போடுமவன் ஆணல்ல
ஆணென்ற போர்வையில் வாழும் பெண்ணானவன் .......

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

கடவுள் இருக்கிறார்

அப்பாவின் சேவகியான அம்மாவின்
ஆன்மீக பயணங்களில் விடுதலையென ...
.
ஓடி போன பிள்ள திரும்பி வருவானென
காசு முடிச்சிடும் அத்தையின் நம்பிக்கையாக.....

அக்காவின் மாமாவின் காதலில்
பூ போடலில் தேர்ந்தெடுக்கப்படும் பூவாக  .....

அடங்கா காளையென திரியும்
அண்ணனிடம் அம்மா வாங்கும் சத்தியமாக .....

வாசல் தாண்டுமுன் ஆசிர்வதிக்கும்
ஆசிர்வதிக்கும் ஆச்சியின் கைகளில் திருநீராக .....

பரம்பரை செழித்திட
ஊர்முழுக்க அன்னமிடும் அப்பாவின் தர்மமென .....

கடவுள் இருக்கிறார்
அன்பெனும் வடிவத்தில் .....


வெள்ளி, 2 அக்டோபர், 2015

celebrating 24th anniversary with Saidai Damu

இயற்கை விரும்பி நான்
மின்சார உபகரணங்களே பிரியமுனக்கு

மழையின் காதலி நான்
நனைவதே ஆகாதுனக்கு

கமலின் ரசிகை நான்
படமே பிடிக்காதுனக்கு

சைவம் தான் பிடித்தமெனக்கு
அசைவம் இல்லாம உண்ண முடியாதுனக்கு

பயணங்கள் மீது காதலெனக்கு
வீடு தான் சொர்க்கமுனக்கு

இதயத்தின் வழியே யோசிப்பவள் நான்
மூளையின் சொல்லே  பிரதானம் உனக்கு

கோவம் உனது ஆயுதம்
மௌனமே எனது கேடயம்

அன்பில் ஆர்பரிக்கும் கடல் நீ
நதியின்  நிதானமெனக்கு

உணர்வுகள் வேறுபட்டாலும்
அன்பால் இணைந்திருக்கிறோம்

உன் உலகம் நானென
என் உலகம் நீயென .....




செவ்வாய், 1 செப்டம்பர், 2015

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 7}2013 மீள் பதிவு 


       இரண்டாம் உலகப்போருக்குப் பின்  கேப் டவுனில் மக்கள் தொகை அதிகமாகி  இடப்பற்றாகுறை ஏற்பட்டதால் 196ஏக்கர் அளவில் கடல் நீரை பின்னுக்கு தள்ளி நிலமாக்கி உள்ளனர்.கேப் டவுனில் இருந்து வோர்செஸ்டேர் என்னும் செல்லும் பாதையை இரு வழியாக பிரித்து , மலையை சுற்றி இயற்கையை ரசித்து கொண்டே செல்ல ஒரு பாதையும்,மலையை குடைந்து நாலு கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்க பாதையும் அமைத்துள்ளனர் ....நாங்கள் சுரங்க பாதையில் பயணிக்க முடிவு செய்தோம்... பாதை  முழுக்க வெளிச்சமும், ஆபத்து நேரத்தில் தப்பிக்க அவசர வழியும் ஏற்படுத்தி உள்ளனர்  ,.வழி எங்கும் ஒயின் தயாரிக்கும் இடங்கள் உள்ளது ..எல்லோருக்கும் இலவசமாக ருசிப்பதற்க்கு ஒயின் கொடுகிக்றார்கள்..அடுத்து கேப் பாயிண்ட் என்னும் இடம் சென்றோம் ..வரலாறு பாடத்தில் நாம் படித்த வாஸ்கோடகாமா என்னும் போர்த்துகீசிய மாலுமி கண்டுபிடித்த நன்னம்பிக்கை முனை என்னும் இடம் இது தான்..இந்தியாவை கண்டறிய வந்த அவருக்குஇந்த முனை  நம்பிக்கையை ஏற்படுத்தியதால் இந்த பெயர் வந்தது.. பழங்கால கல் படிகட்டுகள்,கலங்கரை விளக்கம்,மூன்று பக்கமும் கடல் என அழகோடு மிளிர்கிறது நன்னம்பிக்கை முனை..அடுத்து நாங்கள்  காங்கோ வைல்ட் லைப் ரேஞ்சு போனோம்.ஆப்ரிக்கா நாட்டில் மட்டுமே காணப்படும் அரிய வகை மிக கொடுமையான விஷம் கொண்ட பாம்புகள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளன, வெள்ளை சிங்கம்,புலி,சிறுத்தை வகைகள் உள்ளன.அடுத்து ஆஸ்ட்ரிச் தலைநகரம் என அழைக்கப்படும் "அவுட்ஷர்ம்"   என்னும் இடத்திற்கு சென்றோம் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடம் ஆகையால் குளிர் மிக அதிகமாக உள்ளது..வெள்ளைகார பெண்மணிகள் சமையல் செய்கிறார்கள் கறுப்பர் இன மக்கள் மற்ற வேலைகளை செய்கிறார்கள்.பீப்,செம்மறி ஆடு,தான் முக்கிய உணவு ,சிக்கன் கறியும் பச்சையாக இருக்கிறது.பிரட் மற்றும் பழம் மட்டுமே பல நேரங்களில் எங்களது உணவாக இருந்தது ...நன்றாக உண்ணும் பழக்கம் உள்ள எங்களுக்கு உணவு பெரும் பிரச்சனையாக இருந்தது