வெள்ளி, 30 நவம்பர், 2012

ரகசிய நூல்

பல்வேறு சொற்களை சேர்த்து
வார்த்தைகளாய் பேசுகின்றேன் உன்னிடம்
அவ்வார்த்தைகளை கோர்த்திருக்கிறது
ரகசிய நூலொன்று.....
வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ளும்
உனக்கு நூலின் ரகசியம் புரிவதில்லை
என்றேனும் ஒருநாள்
வார்த்தைகள் மறைந்து போகலாம்
அன்று நூலின் ரகசியங்கள் புரியுமுனக்கு
காய்ந்த பூக்களின் உதிர்வுக்கு பின்
தெரியும் நாராய்......

சனி, 27 அக்டோபர், 2012

பெயரை தொலைத்தவள்

உன்னை முதன்முதலில்
பார்த்த போது வேணு மாமாவின்
மனைவி என்று எல்லோருக்கும் அறிமுகபடுத்தப்பட்டாய்
பாலா பிறந்த பின் எல்லோரும் பாலாவின்
அம்மா என்றே அழைத்தனர்
மாமாவின் கடையை பார்த்து கொண்டதால்
கடைக்காரம்மா என்று அழைத்தனர் பலர்
நேசத்தையும் பிரியத்தையும் மட்டுமே பகிர
தெரிந்த உன்னை பிரிந்து புகுந்த வீடு
சென்ற அன்று உன்னை கட்டியணைத்து
அழுது பிரிந்தவள்
பின்னொரு நாளில் விசாலாட்சி இறந்து விட்டாள்
என்கிற செய்தி கேள்வியுற்ற போதினில் அந்த செய்தி
எளிதாய் என்னை கடந்து சென்றது
உன் பெயர் தொலைத்த காரணத்தினால் .....






வெள்ளி, 5 அக்டோபர், 2012

சொல்ல முடியவில்லை ...

நீ பார்க்கவில்லை என்பதால்
அலங்கரிப்பதை நிறுத்தினேன்....
நீ கேட்கவில்லை என்பதால்
என் கொலுசுகளை கழற்றினேன்...
நீ ரசிக்கவில்லை என்பதால்
என் புன்னகையை தொலைத்தேன்...
நீ நினைப்பதில்லை என்பதால்
உன்னை நினைப்பதில்லை என்று மட்டும்
சொல்ல முடியவில்லை என்னால்.......



செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ஜன்னலோர இருக்கை

என்றுமே வாய்ப்பதில்லை
பிரியமான ஜன்னலோர இருக்கை
இயற்க்கையின் அழகையும்
பின்னோக்கி ஓடும் மரங்களையும்
சில்லென்ற காற்றையும் தூர இருந்தே
ரசிக்க முடிகிறது எப்பொழுதும்
சிறுவயதினில் அண்ணனின் அடக்குமுறையால்
பின் தம்பியின் ஆசை என்று சொல்லி
வயது வந்த பின் ஆண்களின்
பார்வை பட கூடாதென்று சொல்லி
திருமணம் ஆனதும் கணவரின் சொல்படி
பின் பிள்ளைகளின் விருப்பமென
எப்பொழுதும் இழந்து கொண்டே இருக்கிறேன்
என் பிரியமான ஜன்னலோர பயணத்தை
என்னிடம் இருந்து பிடுங்கப்படும்
ஒவ்வொரு முறையும் பெயரிடப்படுகிறது
விட்டுகொடுத்தல் என்று..........

செவ்வாய், 24 ஜூலை, 2012

தொலைபேசி காதல்

முன்பெல்லாம் எப்போதும் தொடர்பில் இருந்தாய் அழைப்புக்கெல்லாம் பதில் அளித்தாய் நாட்கள் சென்றதும் என் அழைப்புக்கள் எல்லாம் தொலைக்கப்பட்டது பின் அழைத்த போதெல்லாம் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டது உனது எண் அழைப்புகளோ ஏற்புகளோ இல்லை எனினும் எனது தொலைபேசி உனது எண்ணையும் என் இதயம் உன்னையும் அழிக்காமல் பதிந்துள்ளது அன்பின் மிச்ச சுவடுகளாய் ......

ஞாயிறு, 27 மே, 2012

காத்திருக்கிறேன்

.......
ஒற்றை பாதையில் இணைந்து நடந்தோம் இன்பமாய் பிரிவொன்று வந்தது ஓர்நாள்.... பிரிந்து நீ சென்றாலும் பல வழிகளில் தொடர்கிறது உன் பயணங்கள்..... என்றேனும் ஓர் நாள் மீண்டும் நாம் இணைந்து பயணிப்போம் என்றெண்ணி நீ வரும் வழியை பார்த்து கொண்டே காத்துக் கொண்டு இருக்கின்றேன் நீ விட்டு சென்ற இடத்திலேயே......

திங்கள், 16 ஏப்ரல், 2012

அத்தையின் வீடு

தாண்டி போக மனமின்றி
அழகாய் வரவேற்கும்
அத்தை வீட்டு முற்றம்
காதுக்கினிய கொலுசொலியின் கூடவே
ஒத்து ஊதும் அத்தையின் மெட்டி சத்தம்
ஊதுபத்தியின் மணம் மனதினை மயக்கும்
வாய் நிறைய சிரிப்பின் ஊடே
வாடி என்றழைக்கும் பாசமிகு அத்தை
கட்டினாள் மாடி வீடு ...
இன்று உட்கார்ந்தாலே அழுக்காகி விடுமோ
புத்தம்புது சோபா என்று
முகம் சுளிக்கும் வரவேற்பு
கொலுசொலிக்கு பதிலாக வீட்டினுள்ளே
பணத்தின் செழிப்பை உணர்த்தும்
செருப்பினது சத்தம்
ஊதுபத்தி மணமில்லை ஆளுக்கொரு
விதமாய் பூசும் நறுமணத்தின் வாசம்
பாதி கண்கள் தொலைகாட்சியிலும்
பாதி புன்னகை உதட்டிலும் கொண்டு
வா என்று அழைக்கும் அத்தையின் வீடு
இன்று உடனே தாண்டி போக சொல்கிறது
உள் நுழைய மனமின்றி .......

சனி, 7 ஏப்ரல், 2012

தொலைக்கபடும் பொருள்

உன் கைகளில் கிடைக்கும் பொருளாய்
இருப்பதை விட உன்னால்
தொலைக்கப்படும் பொருளாய்
இருப்பதையே விரும்புகிறேன்
நேசிக்கபடுவதும் தேடப்படுவதும்
தொலைக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே என்பதால் ...♪♫♪.¸¸.♪♫♪♫♪.¸¸.♪♫

வெள்ளி, 30 மார்ச், 2012

மாமாவின் மரணசெய்தி..

அதிகாலை வேளையில்
அலறி அழைத்த தொலைபேசியில் வந்தது
அன்பும் பாசமுமாய்
தோளில் தூக்கி வளர்த்த
மாமாவின் மரணசெய்தி ....
கணக்கிட்டது பல காரணங்களை
பணம் மட்டுமே பிரதானமென
மாறிவிட்ட பொருளாதார மனது...
பயணதூரம் கணக்கிடப்பட்டது முதலில்
தொலைவும் அதிகம் பணமும் விரயம்,
பிள்ளைகளின் படிப்பு பாழகுமோ ஒருநாள்?
எங்கள் வீட்டு துயரத்திற்கு
துக்கம் கேட்காமல் போனாரே!
அம்மாவும் தம்பியும் போனால் போதாதோ?
என்றெல்லாம் எண்ணமிட்டது மனது
இறுதியாய் முடிவெடுத்து
ஒரு ரூபாய் செலவழித்து
தொலைபேசியில் இரங்கல் தெரிவித்து
ஊரிலேயே இல்லை நான்
என்கிற ஒற்றை பொய்யுடன் முடிந்து போனது
மாமாவின் மரணசெய்தி.......

ஞாயிறு, 25 மார்ச், 2012

காதல் கவிதைகள்

காத்திருத்தல்

காத்திருப்பதின் வலி உனக்கு
புரிய வைக்க காத்திருக்க வைத்தேன்
இப்போதும் எனக்கு தான் வலிக்கிறது
உன்னை காத்திருக்க வைத்ததால்......

மணம்
என்றுமே மணத்ததில்லை மல்லிகை
இன்று உன் கையில் வாங்கி சூடிய போது
மணத்தது போல் .....

புகைப்படம்
உற்று பார்க்காதே என்னிடம் உள்ள
உன் புகைப்படத்தை
என் உதட்டின் ரேகைகள் மறைத்திருக்கிறது
உன் முகத்தின் அழகை ....

நினைவு விதை
வேரோடு பிடுங்குவதாய் எண்ணி
முழுவதும் களைந்து எறிந்தேன்
உன் காதலை
நியாபக தூறல்கள் விழும் போதெல்லாம்
துளிர்த்து எழுகிறது எங்கோ ஆழத்தில்
படிந்திருக்கும் உன் நினைவு விதைகள் .....

பார்வை
ஆயிரம் வார்த்தைகள் பேசும்
உன் உதடுகளை விட
உன் ஆழ பார்வை ஒன்றே
என் மீதான உன் காதலை
அதிகம் சொல்கிறது ......

செவ்வாய், 13 மார்ச், 2012

இன்றும் ......

பால் வாங்குவதிலும் பேப்பர் வாங்குவதிலும்
ஆரம்பிக்கிறது காலை பொழுது
கணவனிடம் பணிவிடை செய்ய தொடங்கி
பிள்ளைகளிடம் தாயாய் சேவை செய்து
மாமனார் மாமியாரிடம் நல்ல மருமகளாய் பணிந்து
நாள்ளெல்லாம் உழைத்து களைத்து
இரவு கண்மூடி உறங்க போகும் வேளையில்
நினைவினில் வருகிறது ....
ரசிக்காமல் போன தோட்டத்து ரோஜாவும்
கேட்காமல் போன இளையராஜாவின் புதியவெளியீடும்
விசாரிக்காமல் போன அம்மாவின் கால்வலியும்
எழுதாமல் மறந்து போன கவிதை வரிகளும்
வரிசையாய் நினைவுக்கு வருகின்றன........
நாளையேனும் எனக்கென ஒதுக்க வேண்டும்
சிலமணி நேரத்தை என்று எண்ணியபடியே
கழிகிறது இன்று இரவும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........

திங்கள், 27 பிப்ரவரி, 2012

பறவையாய் இருந்த நான் ........

இணையாய் பறப்போமென்று இணைந்தோம்
திருமணத்தில் ....
பருந்தென நீ உயரும் போதெல்லாம்
ஊர்குருவியாய் வரையறுக்கப்பட்டது
என் எல்லைகள் ....
வெகு தூரங்களை நீ கடக்கும் போதெல்லாம்
அதில் பாதி தான் என் அளவென்றாய்....
சுதந்திரங்கள் என்பது உனக்கு மட்டும் சொந்தமாயின
என் கைகளுக்கு விலங்கிடப்பட்டு ....
நாட்கள் செல்ல செல்ல என் சிறகுகள் ஒவ்வொன்றாய்
பிடுங்கப்பட்டு நூல்களாய் கோர்க்கப்பட்டன....
நூல்கள் உன் கைகளில் சிறைபட்டு
பறவையாய் இருந்த நான் பட்டமானேன்....

வியாழன், 16 பிப்ரவரி, 2012

அழகோ அழகு .......

புதியதாய் பூத்த மலரின்
அழகை கண்டு ரசித்த நாளில்
இது தான் உலகிலேயே அழகென்று
எண்ணி வியந்தேன் ....

பௌர்ணமி நிலவின் ஒளி
விழுந்த கடல் அலைகளை
வெள்ளியின் உருகலாய்
பார்த்த அன்று இதுவன்றோ
அழகென்று சிலிர்தேன் ...

உச்சி மலையின் மீது
சில்லென்ற பனிகாற்றில்
மேக கூட்டத்தின் உள்
நடக்கையில் இதைவிட அழகுண்டா
என்று எண்ணி ரசித்தேன் ....

பார்த்து வியந்து சிலிர்த்து ரசித்த
காட்சிகளின் அழகெல்லாம் தோற்றது
இதழ் கடித்து நீ சிரித்த ஒற்றை சிரிப்பினில் .......

திங்கள், 23 ஜனவரி, 2012

சாத்தியமில்லாத ஒன்று

பொய் இல்லாத அரசியல்வாதி
உண்மை பேசும் வக்கீல்
கோபமில்ல ஆண்கள்
கண்ணீரில்லாத பெண்கள்
ஒப்பனை இல்லா யுவதி
சிரிப்பில்லா குழந்தை ....

இதெல்லாமும் சாத்தியமாகலாம்
ஒருநாள்
சாத்தியமே இல்லாத ஒன்று உண்டென்றால்
அது நீயில்லாத நான் ......