வெள்ளி, 15 ஏப்ரல், 2016

கடவுள் இருக்கிறார்

அப்பாவின் சேவகியான அம்மாவின்
ஆன்மீக பயணங்களில் விடுதலையென ...
.
ஓடி போன பிள்ள திரும்பி வருவானென
காசு முடிச்சிடும் அத்தையின் நம்பிக்கையாக.....

அக்காவின் மாமாவின் காதலில்
பூ போடலில் தேர்ந்தெடுக்கப்படும் பூவாக  .....

அடங்கா காளையென திரியும்
அண்ணனிடம் அம்மா வாங்கும் சத்தியமாக .....

வாசல் தாண்டுமுன் ஆசிர்வதிக்கும்
ஆசிர்வதிக்கும் ஆச்சியின் கைகளில் திருநீராக .....

பரம்பரை செழித்திட
ஊர்முழுக்க அன்னமிடும் அப்பாவின் தர்மமென .....

கடவுள் இருக்கிறார்
அன்பெனும் வடிவத்தில் .....


வெள்ளி, 2 அக்டோபர், 2015

celebrating 24th anniversary with Saidai Damu

இயற்கை விரும்பி நான்
மின்சார உபகரணங்களே பிரியமுனக்கு

மழையின் காதலி நான்
நனைவதே ஆகாதுனக்கு

கமலின் ரசிகை நான்
படமே பிடிக்காதுனக்கு

சைவம் தான் பிடித்தமெனக்கு
அசைவம் இல்லாம உண்ண முடியாதுனக்கு

பயணங்கள் மீது காதலெனக்கு
வீடு தான் சொர்க்கமுனக்கு

இதயத்தின் வழியே யோசிப்பவள் நான்
மூளையின் சொல்லே  பிரதானம் உனக்கு

கோவம் உனது ஆயுதம்
மௌனமே எனது கேடயம்

அன்பில் ஆர்பரிக்கும் கடல் நீ
நதியின்  நிதானமெனக்கு

உணர்வுகள் வேறுபட்டாலும்
அன்பால் இணைந்திருக்கிறோம்

உன் உலகம் நானென
என் உலகம் நீயென .....




செவ்வாய், 1 செப்டம்பர், 2015

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 7}2013 மீள் பதிவு 


       இரண்டாம் உலகப்போருக்குப் பின்  கேப் டவுனில் மக்கள் தொகை அதிகமாகி  இடப்பற்றாகுறை ஏற்பட்டதால் 196ஏக்கர் அளவில் கடல் நீரை பின்னுக்கு தள்ளி நிலமாக்கி உள்ளனர்.கேப் டவுனில் இருந்து வோர்செஸ்டேர் என்னும் செல்லும் பாதையை இரு வழியாக பிரித்து , மலையை சுற்றி இயற்கையை ரசித்து கொண்டே செல்ல ஒரு பாதையும்,மலையை குடைந்து நாலு கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்க பாதையும் அமைத்துள்ளனர் ....நாங்கள் சுரங்க பாதையில் பயணிக்க முடிவு செய்தோம்... பாதை  முழுக்க வெளிச்சமும், ஆபத்து நேரத்தில் தப்பிக்க அவசர வழியும் ஏற்படுத்தி உள்ளனர்  ,.வழி எங்கும் ஒயின் தயாரிக்கும் இடங்கள் உள்ளது ..எல்லோருக்கும் இலவசமாக ருசிப்பதற்க்கு ஒயின் கொடுகிக்றார்கள்..அடுத்து கேப் பாயிண்ட் என்னும் இடம் சென்றோம் ..வரலாறு பாடத்தில் நாம் படித்த வாஸ்கோடகாமா என்னும் போர்த்துகீசிய மாலுமி கண்டுபிடித்த நன்னம்பிக்கை முனை என்னும் இடம் இது தான்..இந்தியாவை கண்டறிய வந்த அவருக்குஇந்த முனை  நம்பிக்கையை ஏற்படுத்தியதால் இந்த பெயர் வந்தது.. பழங்கால கல் படிகட்டுகள்,கலங்கரை விளக்கம்,மூன்று பக்கமும் கடல் என அழகோடு மிளிர்கிறது நன்னம்பிக்கை முனை..அடுத்து நாங்கள்  காங்கோ வைல்ட் லைப் ரேஞ்சு போனோம்.ஆப்ரிக்கா நாட்டில் மட்டுமே காணப்படும் அரிய வகை மிக கொடுமையான விஷம் கொண்ட பாம்புகள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளன, வெள்ளை சிங்கம்,புலி,சிறுத்தை வகைகள் உள்ளன.அடுத்து ஆஸ்ட்ரிச் தலைநகரம் என அழைக்கப்படும் "அவுட்ஷர்ம்"   என்னும் இடத்திற்கு சென்றோம் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடம் ஆகையால் குளிர் மிக அதிகமாக உள்ளது..வெள்ளைகார பெண்மணிகள் சமையல் செய்கிறார்கள் கறுப்பர் இன மக்கள் மற்ற வேலைகளை செய்கிறார்கள்.பீப்,செம்மறி ஆடு,தான் முக்கிய உணவு ,சிக்கன் கறியும் பச்சையாக இருக்கிறது.பிரட் மற்றும் பழம் மட்டுமே பல நேரங்களில் எங்களது உணவாக இருந்தது ...நன்றாக உண்ணும் பழக்கம் உள்ள எங்களுக்கு உணவு பெரும் பிரச்சனையாக இருந்தது 

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

   பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6} மீள்பதிவு

                     தென்ஆப்ரிகாவின் பார்லிமென்ட் பார்த்தோம்....அதன் அருகில் டச்சுகாரர்கள் கம்பெனி வைத்திருந்த போது உருவாக்கிய கார்டன் தற்போது  கம்பெனி கார்டன் என அழைக்கப்பட்டு இன்றும் பல வகையான பழமைமிக்க மர,செடி வகைகளுடன் பராமரிக்கபடுகிறது.....1968 ல் டச்சுகாரர்கள் காலத்தில் இந்தியா மற்றும் மலேஷியாவில் இருந்து தென்னாப்ரிக்கா சென்று குடியேறியவர்கள் கட்டிய வீடுகள் இன்றும் பாதுகாக்கபடுகிறது ..அவர்களின் முதல் துறைமுகமாகிய   castle of good hope பார்த்தோம் ..அங்கே ஆங்கிலேயர்கள், டச்சு,மற்றும் அவர்களை ஆண்டவர்கள் ஏற்றிய கொடி கம்பங்கள் மட்டும் கொடிகள் இன்றி  இருக்கிறது ..1994 இல் திரு.நெல்சன் மண்டேலா அவர்கள் ஏற்றிய அந்நாட்டின்  புதிய கொடி பறக்கிறது..அங்கிருந்து houtbay என்னும் இடத்திற்கு போனோம் மூன்று பக்கமும் மலைகள் சூழ நடுவில் கடல்.... இதுவரை பார்த்திராத வகையில் கொள்ளை கொள்ளும் அழகுடன் மனதை மயக்குகிறது.hout என்பது வுட் என்னும் அர்த்தம் .தேக்கு மரங்கள் நிறைந்துள்ள இடம் என்பதால் அந்த பெயர் வைத்துள்ளனர்...அங்கிருந்து அடுத்து boulders பீச் சென்றோம்,ஆப்பிரிக்காவில் வேறெங்கும் காண முடியாத .அண்டார்டிகா வில் இருந்து இங்கு பரவிய பென்குயின் இங்குள்ள கடற்கரையின் ஒரு பகுதியில் பரவி இருக்கிறது ..அங்கிருந்து கார்டன் ரூட் என்னும் வழயில் பயணக் செய்தோம் பெயருக்கு ஏற்றார் போல் அவ்வளவு அழகான பாதை, பயணத்தில் ஒரு சலிப்பான நேரம் கூட வருவது இல்லை ..தோட்டங்களும் பசுமையான மலை முகடுகளும் ,சில்லென்ற சீதோஷனமும் ஐநூறு கிலோ மீட்டர் பயணம் செய்ததே தெரியாமல் கடந்து வந்தோம்...அழகாய் கோட் போட்டு கொண்டு நம் கார் அருகில் வரும் பிச்சைகாரர்கள் குட்மார்னிங் சொல்லி உடனே நகர்ந்து சென்று விடுகின்றனர் ....நாம் விரும்பினால் அழைத்து கொடுக்கலாம்...மலைசரிவு ஏற்ப்படாமல் இருக்க மலைப்பாதையில் தூண்கள் அமைத்து அரண் அமைத்து உள்ளனர் ...மக்கள் பாதுகாப்பில் மிக அதிக அக்கறை கொண்டுள்ளனர்...டோல்கேட்டில் பண பரிவர்த்தனை கிடையாது எல்லோரும் கார்டு தேய்த்து கொண்டு போக வேண்டியது தான் ......

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

மகனின் பள்ளியில் இருந்து 10 நாள் பயணம் தொடங்கினோம் ...முதலில் கேப்டவுன் போனோம்..சவுத் ஆப்ரிக்காவின் மூன்று தலைநகரங்களில் ஒன்றான கேப்டவுன் மிக அழகான ஊர் ...மிக சுத்தமான ஊரும் கூட ...நகரத்தில் நுழைந்ததும் முதலில் கண்ணில் படுவது டேபிள் மௌன்டென் என்னும் மலை ..அழகான மலை மேல் மேகத்தை வைத்து போல் இருக்கிறது,முதலில் வாட்டர் பிரண்ட் என்னும் இடத்திற்கு சென்றோம் ,அங்கு தான் ஆர்பர் உள்ளது, துறைமுகம் போல் இல்லாமல் பொழுதுபோக்கு இடம் போல் உள்ளது..மிக பெரிய ராட்டினம் ,குழந்தைகள் விளையாட்டு இடம், ஹோட்டல்கள் இருக்கிறது  ...டச்சுக்காரர்கள் பயணித்து  வந்த கப்பலை பார்வையிட வைத்திருக்கிறார்கள் ..இங்கே ராமேஸ்வரத்தில்   தூக்கும் பாலம் உள்ளது போல் அங்கு நகரும் பாலம் அமைத்து இருக்கிறார்கள் ..படகு வரும் நேரத்தில் நகர்ந்து வழி விடுகிறது .கடந்ததும் திரும்ப பழைய இடத்திற்கு வந்து பொருந்தி விடுகிறது..அடுத்து டேபிள் மௌன்டன் மேல் கேபிள் கார் மூலம் சென்றோம்...அந்த இடம் பல நேரங்களில் சீதோஷ்ண நிலையின் காரணமாக போக முடியாமல் போய் விடும்...நல்ல வேலையாக நாங்கள் போன போது எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது ... அருமையான அனுபவம் 1067 அடி உயரத்தில் சில்லென்ற மேகத்தின் ஊடே நடந்து சென்று மேலிருந்து கேப்டவுன் அழகை பார்க்க இரண்டு கண்கள் போதாது ...மலை,கடல் ,ஊர் மூன்றும் சேர்ந்து பார்க்கும் போது நிச்சயம் இயற்கையின் அதிசயத்தை வியக்காமல் இருக்க முடிவதில்லை ..

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

பால்யம்  கடக்கவில்லையோ என 

கொஞ்ச வைக்கிறாள் குழந்தையாய் 

 கைப்பொதிந்து பின்பற்றி நடக்கையில் 

சிறுமியகிறாள் சில நேரங்களில்

 காளையினரின் கண் படுகையில்

 குமரியென எண்ணிட வைக்கிறாள் 

தோள் அணைத்து அந்தரங்கம் பகிர்வதில் 

 தோழியகிறாள் பல பொழுதுகளில் 

 நாகரீகம்  கற்று கொடுத்து பழக 

சொல்வதில் ஆசிரியை ஆகிறாள் 

குட்டு வைத்து தவறை திருத்துகையில்

 சகோதரியகிறாள் சில பொழுகளில்  

அன்பை பொழிந்து மடி சாய்த்து கொள்வதில்

 அன்னையும் ஆகிறாள் இந்த பட்டாம்பூச்சி 

என் வாழ்வில் வண்ணங்கள் சேர்க்க வந்த 

இந்த தேவதையின் பிறந்தநாள் இன்று........

 

சனி, 1 ஆகஸ்ட், 2015

நண்பர்கள் தோழிகள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். ..
          19 வயதில் திருமணம் ஆனதுமுதல் கணவர் பிறகு பிள்ளைகள் என்பதை தவிர வேறு எதுவுமே தெரியாமல்
இருபது வருடங்களாக அடுப்படியே உலகமாகி  இருந்த எனக்குள்ளும் எழத முடியும் என்கிற தன்னம்பிக்கையயும் எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தையும் கொடுத்தது நட்புக்களாகிய உங்களது பாராட்டுகளும் விமர்சனங்களும் தான்....உங்கள் மூலமாக தான் என் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி சிறிது  நகர்ந்திருக்கிறேன்....நன்றி நட்புக்களே....🌷Happy friendship day my dear friends✌👑🎁💃😁😇😻🙋🙈