வெள்ளி, 30 ஜூலை, 2010

தவறுகள்


தவறுகள் எல்லாமே
தெரியாமல் செய்தவையாக
கருதபடுகின்றன
நமக்கு வேண்டியவர்கள்
செய்யும் போது மட்டும் ....

பார்வை

உயிர் கொல்லும் என்று
தெரிந்த பின்னும்
வேண்டுமென யாசிக்கிறேன்
உனது பார்வையை ....

நினைவு

உன்னை நினைக்க
எனக்குள் ஆயிரம் காரணங்கள்
என்னை மறக்க
உனக்குள் ஆயிரம் காரணங்கள் ...
அழியாத நினைவு சின்னங்கள்
என நீ கொடுத்த
பரிசு பொருட்கள் எல்லாம்
அழிந்தன காலப்போக்கில் ...
அழித்து விடு என நீ சொன்ன
உன் நினைவுகள் மட்டும்
அழியவில்லை இன்றுவரை ...

திங்கள், 5 ஜூலை, 2010

தொலைந்த சிறகுகள்

எனக்கு நினைவு தெரிந்த
நாள் முதலாய் தேடுகிறேன்
தொலைந்து போனதாய்
நான் நினைத்திருந்ததை

சகோதரன் துணையுடன்
கடைவீதிக்கு சென்றேன்
தந்தையின் கைப்பற்றி
தெருவில் நடந்தேன்
இன்று கணவனின் கண்காணிப்பில்
வலம் வருகின்றேன்

எனக்கென்ற சிறகுகள்
எங்கேயென தேடுகையில்
கிடைத்தது பதிலொன்று
தொப்புள் கொடியுடன்
பிய்த்தெறிந்து விட்டனர்
பெண்ணென்று தெரிந்ததால் ..........

வியாழன், 29 ஏப்ரல், 2010

இதய வாசல்

இதய வாசலை
மூடி விட்டதால் என்னை
நுழைய விடாமல்
தடுக்கலாம் என்று நினைக்காதே.....
உன் இதய வாசல் வழியே
வந்து செல்லும் நினைவலைகள்
அல்ல நான்.....
உன் இதயத்தை
துடிக்க வைக்கும் துடிப்பலைகள் நான்......

கண்ணீர்

உதடுகள் உச்சரிக்காத
உள்ளத்து துயரங்களை
உரியவருக்கு உணர்த்திட
உருண்டோடி வரும் எழுதுகோல்

கதை

தான் படைத்த கதைகளை
சுமந்து கொண்டு
படவுலகில் அலைந்து தோற்று
களைத்து வீடு திரும்பிய
காதல் கணவனை ....
தோளோடு அணைத்து
தன்னம்பிக்கை ஊட்டி
ஆறுதலோடு தட்டி தூங்க வைத்த
காதல் மனைவி ......
இரவு முழுவதும் விழித்திருந்து
கண்ணீரோடு கதை புனைகிறாள்
மறுநாள் காலை வரப்போகும்
மளிகைக்கடை காரனுக்கும்
பால்காரனுக்கும் சொல்ல வேண்டிய பதில்களை