புதன், 13 ஏப்ரல், 2011

குடும்ப தலைவி

திருமணமானதும் மாறியது
எனக்கு பிடித்தமான வண்ணங்கள் ,
உணவுகள் ,ஆசைகள் கணவரது
எண்ணங்களுகேற்றபடி .....

கணவருக்காக காட்டன் புடவைகளும்
பிள்ளைகளுக்காக நாகரீக உடைகளும்
மாற்றி கொண்டதில் மறைந்தே போனது
எனது பட்டுப்புடவை மோகங்கள் ......

கணவரது உறவினர்களையும்
பிள்ளைகளது தோழர் தோழிகளையும்
நேசிக்கும் பொழுதினில் நினைத்து
பார்க்கிறேன் தொலைந்து போன எனது
சொந்தங்களையும் தோழிகளையும் .......

பிள்ளையின் அலைபேசி அவனுக்காகவும்
பெண்ணுடைய அலைபேசி அவள் சொந்தமாகவும்
கணவர் அலைபேசி அவரது நண்பர்களுக்காகவும்
ஆகி போனதில் எனது அலைபேசி மட்டும்
பொதுவானது எனக்கெதுவும் அந்தரங்கம்
இல்லையென கூறி.......

கணவரது விருப்பதிற்காக அவர்
உறவினர் வீடுகளுக்கும்
பிள்ளைகள் விருப்பதிற்காக குளிர்
பிரதேசமும் பயணப்பட்டு களைத்ததில்
நிறைவேறாமல் போனது எனது அருவியில்
நனையும் ஆசைகள் .....

அலுவலகத்தில் கணவரும்
கணினி முன் பிள்ளையும்
தொலைக்காட்சிப் பெட்டியின் முன் மகளும்
முடங்கிப்போனதால் அடுப்படியே
உலகமாகிப் போனது எனக்கு ........

கடலில் இட்ட பெருங்காயாமாய்
என் கனவுகளை குடும்பத்தில் தொலைத்து
'நான்' என்ற சுயத்தை தொலைத்து பெற்றதோர்
பெயர் 'அருமையான குடும்ப தலைவி '

திங்கள், 11 ஏப்ரல், 2011

சிறகுகள்


ஒவ்வொரு இறகாய்
கோர்த்து பறக்க கற்றுகொடுத்தேன்
ஒவ்வொரு முறையும் இறகை
கோர்க்கும் போதும்
சிறகை விரித்து நீ பறப்பாய்
என எண்ணி காத்திருந்தேன்
உயர பறக்கவில்லை நீ
பிறகு உண்மை புரிந்தேன்
பறப்பதற்கு இறகுகள்
மட்டும் போதாது
மனதும் முயற்சியும் வேண்டும் என.....

வியாழன், 24 மார்ச், 2011

எல்லை கோடு


ஒவ்வொரு கல்லாக அடுக்கி
கட்டவில்லை உன்மேல்
எனது காதல் கோட்டையை
ஒவ்வொரு கல்லாக உருவி
தகர்த்தாய் என் இரும்பு மனதை.....

கடந்து போன யாரிடமும்
கொண்டதில்லை இந்த மயக்கம்
உன்னை கடந்து போக இயலவில்லை
பெண் மனதிலே கலக்கம் ....

தொண்டை குழியின் உள்ளே
போக இயலாதவாறு உணவையும்
இமைகளின் உள்ளே நுழைய
விடாமல் உறக்கத்தையும் கெடுத்தாய் ....

எல்லைகள் தாண்டாமல்
இருக்க பழகியவள் தான்
இன்று வேண்டுகிறேன் என்
எல்லை நீயாக இருக்க வேண்டுமென.......

சனி, 19 மார்ச், 2011

மனம்

பிள்ளைகள் படிக்கவில்லை என்றால்
நான் கற்பிப்பதில் குறை என்கிறாய்
வேலையாட்கள் பணிபுரியவில்லை என்றால்
நான் கண்காணிப்பதில் குறை என்கிறாய்
தொழிலில் நீ தோல்வியுற்றால்
என் ஆலோசனையில் தவறென்று சொல்கிறாய்
குடும்பத்தில் பிரச்சனைஎனில்
என் கட்டுகோப்பில் குறை என்கிறாய்
என் சமையல் ருசிக்கவில்லையெனில்
என் கவனத்தில் குறைஎன்கிறாய்
எவ்வளவு குறைகள் நீ கூறினாலும்
உன் விஷயத்தில் நிறை தான் எனக்கு
நீ என்பதே எதுவுமில்லை
நான் தான் உனக்கு எல்லாமே என்று ......

திங்கள், 14 மார்ச், 2011

முதலாளியம்மா


அவர்கள் இருவருக்கும்
ஒரே விதமான உரிமைகள்
ஏசி காரில் இருவருக்கும்
சொகுசு பயணங்கள் உண்டு
ஆடை அலங்காரங்கள்
குறைவில்லாமல் உண்டு
தேவைக்கு அதிகமாகவே
வித விதமான உணவுகள் உண்டு
இருவருக்குமே முதலாளியின்
படுக்கையறையில் இடமுண்டு
இருவரையுமே தன் அந்தஸ்தின்
அடையாளம் என்பார் முதலாளி
இருவருமே அவரை எதிர்த்து பேசுவதில்லை
அவர் சொல்லுக்கு அடங்கி
நடப்பது தான் இருவருக்கும் வேலை
அந்த இருவரில் ஒருவரை மட்டும்
முதலாளியம்மா என்றும்
மற்றொருவரை ஜிம்மி என்றும்
பெயர் சொல்லி அழைப்பதுண்டு........

வியாழன், 10 மார்ச், 2011

அம்மாவிற்கு பிறந்தநாள் பரிசு

அம்மா ..................
புரியாத வயதினில் இருந்தே
இப்பெயரிட்டே அழைக்கிறேன் உன்னை
உனகென்று இருந்த ஒர்பெயரை
தொலைத்து விட்டாய் திருமணமானதும்
இளவயதினில் மணம் புரிந்ததும்
இன்னாரின் மனைவி என்றும்
பிள்ளைகளாய் நாங்கள் பிறந்ததும்
எங்களின் தாய் என்றுமே அறியபட்டாய்.......

தீராத பஞ்சத்தின் பிடியினில்
வயிறு காய்ந்து நீ கிடந்த போதிலும்
எங்கள் வயிறு காயாதிருக்க
உன் ஊனுயிர் கரைத்து நீ உழைத்தாய் ....

கூலி கொடுத்து தைத்து தர
வழி இல்லாத நாட்களிலும்
பண்டிகை புதுத்துணி நாங்கள் உடுத்திட
இரவெலாம் கண்விழித்து நீ தைத்து தந்தாய் ....

பூப்ப்பைய்து நாங்கள் பெரியவர்கள் ஆனதும்
பூக்களினால் ஜடை தைத்து
நீ அழகு பார்த்தாய் ஆனால்
அன்றிலிருந்து நீ உன் அழகான நீள கூந்தலை
கொண்டை முடித்து பூக்களை மறந்தாய் .....

அழகாய் புடவையுடுத்தி அலங்காரம்
நாங்கள் புரிய ஆரம்பித்ததில் இருந்தே
நீ உன் அலங்காரங்களை துறந்து
வயதை அதிகமாக காட்டி கொண்டாய் ......

இப்போது நான் உணர்கிறேன் அம்மா
அம்மா என்கிற வார்த்தையின் பின்னால்
தியாகங்களும் அதனால் ஏற்படும் வலிகளும்
உள்ளதென்பதையும் தியாகங்கள் புரிகையில்
உனக்கும் வலித்திருக்கும் என்பதையும்........

எத்தனையோ பிறந்தநாள் பரிசுகள் நீ எனக்கு
கொடுத்திருக்கிறாய் என்னால் முடிந்த
கவிதை பரிசை உனக்கு அளிக்கிறேன் அம்மா
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...........

திங்கள், 7 மார்ச், 2011

பெண்விடுதலை


அதிகாலை எழுந்து
வீட்டு வேலைகளை முடித்து
பிள்ளைகளையும் கணவரையும்
கவனித்து அனுப்பி
மாமியாருக்கும் மாமனாருக்கும்
சமைத்து வைத்து
அலுவலகம் சென்று
நாள் முழுவதும் உழைத்து களைத்து
வீடு திரும்பியதும்
மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு
மறுமொழி கூறாமல் மௌனித்து
மாமனாரின் அதிகாரங்களுக்கு
அடிபணிந்து அடங்கி
கணவரிடம் வேண்டி கெஞ்சி
அனுமதி பெற்று
சமைத்து முடித்து கிளம்பி போகிறாள்
மகளிர் தின பட்டிமன்றத்தில்
மேடை ஏறி பெண் விடுதலை
பற்றி முழக்கமிட .........